டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும்... ... வயநாடு நிலச்சரிவு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் அவர் காலை 11 மணியளவில் கேரளாவின் கண்ணூர் விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் பறந்தபடி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வயநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
பிரதமரின் இந்த பயணத்தின்போது, கேரளா கவர்னர் ஆரிப் முகமது, முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து செயல்படுவார்கள். பிரதமரின் வயநாடு பயணத்தையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி உள்பட பலர் சென்று பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.