பாரா பேட்மிண்டனில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து

பாரா பேட்மிண்டனில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நினைவுப்பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.

Update: 2024-09-05 14:56 GMT

சென்னை,

பாரீஸ் நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்று, பாரா பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய தமிழக வீராங்கனைகளை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நினைவுப்பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பாரீஸ் நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் 2024-ல் இந்தியா சார்பில் பங்கேற்று பாரா பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை துளசிமதி முருகேசன், வெண்கலப் பதக்கம் வென்ற தங்கைகள் மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் தாயகம் திரும்பியுள்ள நிலையில், அவர்களை இன்று நேரில் சந்தித்து நினைவுப்பரிசுகளை வழங்கி வாழ்த்தினோம்.

தமிழ்நாட்டிலிருந்து 6 மாற்றுத்திறனாளி வீரர் - வீராங்கனையர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்ற நிலையில், அவர்களில் நால்வர் பதக்கங்களுடன் திரும்பியுள்ளதையொட்டி நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம்.

நம் வீராங்கனையர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்றது தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். ELITE, MIMS, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை போன்றவற்றின் மூலம் தமிழ்நாடு அரசு அவர்களின் வெற்றிக்கு துணை நின்று வருவதை எடுத்துரைத்து அன்பை வெளிப்படுத்தினர். நம் மாற்றுத்திறன் வீரர் - வீராங்கனையரின் வெற்றிப்பயணம் தொடரட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்