ஆசிய பெண்கள் 5 பேர் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

உலகக் கோப்பை போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் 5 பேர் ஆக்கி தகுதி சுற்று போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நேற்று தொடங்கியது.

Update: 2023-08-25 22:43 GMT

image courtesy: HI via ANI

சலாலா,

ஒரு அணியில் 5 பேர் களம் காணும் முதலாவது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கிறது. இந்த தொடருக்கு போட்டியை நடத்தும் ஓமன் நேரடியாக தகுதி பெறும். மற்றும் 5 மண்டலங்களில் நடைபெறும் தகுதி சுற்று போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதி அடையும். உலகக் கோப்பை போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் 5 பேர் ஆக்கி தகுதி சுற்று போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நேற்று தொடங்கியது.

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 7-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை துவம்சம் செய்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இந்திய அணியில் கேப்டன் நவ்ஜோத் கவுர் (3-வது, 28-வது நிமிடம்), மோனிகா (12-வது, 20-வது நிமிடம்) தலா 2 கோலும், அக்ஷதா தேகலே (4-வது நிமிடம்), மரியனா குஜூர் (17-வது நிமிடம்), மஹிமா சவுத்ரி (28-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். மலேசியா தரப்பில் வான் வான் (7-வது நிமிடம்), அஜிஸ் ஜப்ரியா (11-வது நிமிடம்) கோல் போட்டனர்.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்