நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம்...சிறந்த பீல்டர் விருதை வென்ற இளம் வீராங்கனை

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின.

Update: 2024-10-05 08:33 GMT

Image Courtesy: @BCCIWomen

துபாய்,

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 160 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 102 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 58 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்திய அணி தோல்வியை தழுவியதால் அரையிறுதிக்கு முன்னேற எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) ஒவ்வொரு தொடரின் (இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்) முடிவிலும், அந்த தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்/ வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதேபோல், ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் சிறப்பாக பீல்டிங் செய்யும் வீரர்/ வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த வீராங்கனை விருது இளம் வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்