ஆடுகளங்கள் மீது எந்த ஒரு குறையும் சொல்ல விரும்பவில்லை - இலங்கை கேப்டன் ஹசரங்கா பேட்டி

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

Update: 2024-06-19 05:18 GMT

image courtesy:AFP

கொழும்பு,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.

லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. இந்த தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - அமெரிக்கா அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் குரூப் டி-யில் இடம் பெற்றிருந்த முன்னாள் சாம்பியனான இலங்கை அணி 4 ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றி மட்டும் பெற்று (1 வெற்றி, 2 தோல்வி, 1 ஆட்டம் ரத்து) சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. இதனால் அந்த அணியின் மீது தற்போது விமர்சனங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தாங்கள் தோல்வியை சந்தித்தது குறித்து பேசிய இலங்கை அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா கூறியதாவது, நீங்கள் ஒரு போட்டியை தோற்ற பிறகு ஆடுகளம், மைதானத்தின் சூழல், போட்டியின் சூழல் உட்பட பல காரணங்களை அடுக்கடுக்காக சொல்லலாம். ஆனால் தொழில் முறையாக நீங்கள் கிரிக்கெட் விளையாடும்போது அவ்வாறு காரணங்களை சொல்வது சரியான விசயம் கிடையாது.

ஏனெனில் எதிர்த்து விளையாடும் அணியும் அதே ஆடுகளத்தில் தான் விளையாடுகிறது. எனவே மைதானமோ, சூழ்நிலையோ எந்த ஒரு காரணமும் தோல்விக்கான காரணம் அல்ல. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு ஆட்டமுறையை மாற்றிக் கொள்வதுதான் கிரிக்கெட் வீரராக நம்முடைய வேலை. ஒரு தேசிய அணிக்காக விளையாடும்போது அதனை அந்த பொறுப்பை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

அந்த வகையில் நாங்கள் இந்த அமெரிக்க ஆடுகளங்கள் மீது எந்த ஒரு குறையும் சொல்ல விரும்பவில்லை. முடிந்தவரை எங்களால் அந்த சூழலுக்கு தகவமைத்து கொண்டோம். இருந்தாலும் எங்களால் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. ஒரு அணியாகவும், ஒரு அணியின் கேப்டனாகவும் நாங்கள் இந்த தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்