6 பந்துகளில் 6 சிக்சர்கள், 9 பந்துகளில் அரைசதம் - யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த நேபாள வீரர்

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் 9 பந்துகளில் அரைசதம் கடந்து யுவராஜ் சிங்கின் சாதனையை நேபாள வீரர் திபேந்திர சிங் முறியடித்தார்.

Update: 2023-09-27 11:46 GMT

 ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் குரூப் ஏ பிரிவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நேபாளம்-மங்கோலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மங்கோலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக விளையாடிய நேபாளம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.

அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குஷல் புர்ட்டல் மற்றும் ஆஷிப் முறையே 19 மற்றும் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் ரோகித் பவுடல் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய திபேந்திர சிங் 9 பந்துகளில் 8 சிக்சர்கள் விளாசி அதிவேகமாக அரைசதம் கடந்தார். இதன் மூலம் அவர், இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் 16 ஆண்டுகால சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.

முன்னதாக 2007-ம் ஆண்டு யுவராஜ் சிங் ஐசிசி டி20 உலக கோப்பையின் போது இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், 12 பந்துகளில் அதிவேகமாக அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார். மேலும் திபேந்திர சிங் தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து யுவராஜ் சிங்கின் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் சாதனையையும் சமன்செய்தார்.

மேலும் அந்த அணியில் அதிரடியாக விளையாடிய குஷல் மல்லா 50 பந்துகளில் 137 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதைத்தொடர்ந்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மங்கோலியா அணி 13.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்த ஆட்டத்தில் 273 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்