நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்; 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் 38/2

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

Update: 2023-12-08 12:13 GMT

Image Courtesy: @BCBtigers

டாக்கா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 150 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியினர் நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

வெறும் 66.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி வங்காளதேச வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

அந்த அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனையடுத்து நேற்று நடைபெறவிருந்த 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது.

இதையடுத்து 3வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி வங்காளதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 37.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் க்ளென் பிலிப்ஸ் 87 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 8 ரன்கள் பின்னிலையுடன் வங்காளதேச அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.

வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாகிர் ஹசன் மற்றும் மஹ்முதுல் ஹசன் ஜாய் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மஹ்முதுல் ஹசன் ஜாய் 2 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய கேப்டன் ஷாண்டோ 15 ரன்னிலும் அவுட் ஆகினர்.

வங்காளதேச அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 4ம் நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்