காண கண்கோடி வேண்டும்..! பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்த பத்மாவதி தாயார்..!

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கஜ வாகன சேவை இன்று இரவு நடைபெறுகிறது.

Update: 2023-11-14 07:48 GMT

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

முதல் நாளில் த்வஜாரோஹணம், சின்ன சேஷ வாகன சேவை, இரண்டாம் நாளில் பெரிய சேஷ வாகன சேவை, ஹம்ச வாகன சேவை நடைபெற்றது. மூன்றாம் நாள் காலையில் முத்தையாபு பாண்டிரி வாகனத்தில் கஜேந்திர வரதராக தாயார் எழுந்தருளினார். இரவில் பத்மாவதி தாயார் சிம்ம வாகனத்தில் யோக லட்சுமியாக எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

நான்காம் நாள் காலையில் கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் எழுந்தருளி அருள்பாலித்தார். இரவில் ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார்.

ஐந்தாம் நாளான இன்று காலையில் பல்லகி உற்சவம் நடைபெற்றது. பத்மாவதி தாயார் சர்வ அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்புரிந்தார். தாயாருக்கு ஆராதனைகள் செய்யப்பட்டன. கலைஞர்கள் நடனமாடியும், பாடல்களை பாடியும் தாயாரை வரவேற்றனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தாயாரை கண்குளிர தரிசனம் செய்து பரவசமடைந்தனர். 

முக்கிய நிகழ்வான கஜ வாகன சேவை இன்று இரவு நடைபெறுகிறது. வரும் 18ம் தேதி பஞ்சமி தீர்த்தம் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புஷ்கரணியில் புனித நீராடுவார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்