கிராம உதவியாளர் பணிக்கு 6 மையங்களில் எழுத்து தேர்வு; நாளை மறுநாள் நடக்கிறது

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு 6 மையங்களில் எழுத்து தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Update: 2022-12-01 20:14 GMT

எழுத்து தேர்வு

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

அதன்படி எழுத்து தேர்வு பெரம்பலூர் வட்டத்திற்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை வட்டத்திற்கு வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், குன்னம் வட்டத்திற்கு வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் வட்டத்திற்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது.

நுழைவு சீட்டு

இணைய வழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த செல்போன் எண், மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும், அதன்மூலம் அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிராம உதவியாளர் பணிக்கு இணையவழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https://agaram.tn.gov.in/onlineforms/formpage-open.php?id=43-174என்ற இணையதளத்தினுள் சென்று பதிவு எண்ணையும், செல்போன் எண்ணையும் பதிவு செய்து நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட வேலை வாய்ப்பகம் மற்றும் முன்னாள் படை வீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு அனுமதிச் சீட்டு சம்பந்தப்பட்ட தாசில்தார்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கூராய்வு செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

மின்னணு சாதனங்கள்

விண்ணப்பதாரர்கள் காலை 9.30 மணி முதல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50 மணிக்கு பின் அனுமதிக்கப்படமாட்டார்கள் மற்றும் காலை 10.50 மணிக்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிச்சீட்டு மற்றும் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை தவிர தேர்வறைக்குள் வேறு எந்த பொருளையும் தேர்வறைக்குள் கொண்டு வரக்கூடாது.

விண்ணப்பதாரர்கள் செல்போன், புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டு வரக்கூடாது என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்