கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை சீரமைக்கப்படுமா?

குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-12 18:45 GMT

கொள்ளிடம்:

குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியிலிருந்து கொள்ளிடம் ெரயில் பாலம் அருகே ஆற்றங்கரை சாலையையொட்டி மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்துக்கு கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை மட்டுமே பிரதான சாலையாக உள்ளது. கொள்ளிடம், பாரத்சேகர், கொள்ளிடம் பகுதியில் உள்ள நகர் பகுதிகள், மேலவல்லம், ஆயங்குடி பள்ளம், குத்தவக்கரை, தைக்கால், தண்ணீர்பந்தல், சாமியம், சந்தப்படுகை, திட்டுபடுகை, மாங்கனாம்பட்டு உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த இறந்தவர்களின் உடல்களை சுமந்து சென்று எரியூட்டபட்டு வருகிறது. இந்த மயானத்துக்கு 10 மீட்டர் அருகில் கிறிஸ்தவர்களுக்கான கல்லறை அமைந்துள்ள இடமும் உள்ளது. இந்த மயானத்துக்கு இறந்தவரின் உடல்களை வாகனத்தில் தான் எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சீரமைக்க வேண்டும்

அப்போது குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை வழியாக கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த சாலையில் ஒரு வாகனம் செல்லும் போது எதிரே ஒரு வாகனம் வந்தால் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த ஆற்றங்கரை சாலை கடந்த மழைக்காலத்தில் சில இடங்களில் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 20-க்கும் மேற்பட்ட கிராமமக்களின் நலன் கருதியும், பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கொள்ளிடம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிரமமின்றி எளிதில் வந்து செல்லும் வகையில் குண்டும், குழியுமான கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆற்றின் கரையோர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்