மேலப்பூதனூரில் புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா?

மேலப்பூதனூரில் புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா?

Update: 2022-12-17 18:45 GMT

மேலப்பூதனூரில் சேதமடைந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊராட்சி மன்ற அலுவலகம்

நாகை மாவட்டம் கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூரில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு கீழப்பூதனூர், மேலப்பூதனூர், பெருநாட்டாந்தோப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்காக தினமும் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகம் 640 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2000 வாக்காளர்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது. தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்து மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுகின்றன. எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே உயிர்சேதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு மேலப்பூதனூரில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிமெண்டு காரைகள் சேதம்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த செல்வகணேசன் கூறுகையில்:-

இந்த கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன் பழுது நீக்கம் செய்யப்பட்டது. தற்போது இந்த அலுவலகம் எந்தவித பராமரிப்பும் இன்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கட்டிடத்தின் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கீழே விழுகிறது. மேலும் கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் கட்டிடத்திற்குள் மழைநீர் ஒழுகுவதால் ஆவணங்கள் நனைந்து சேதமாகி வருகிறது. இதில் பணிபுரியும் அலுவலர்கள் கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சத்துடன் இருந்து வருகின்றனர். எனவே புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றார்.

இடிக்க வேண்டும்

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் கூறுகையில்:-

இந்த அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டிடம் இடிந்து விழுமோ? என அஞ்சுகின்றனர். சேதமடைந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், மனுக்கள் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்