இடஒதுக்கீடு கொண்டு வந்ததன் நோக்கம் என்ன? -கனிமொழி எம்.பி. பேச்சு

இடஒதுக்கீடு கொண்டு வந்ததன் நோக்கம் குறித்து ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. விளக்கம் அளித்தார்.

Update: 2022-08-20 18:59 GMT

ராஜபாளையம்

இடஒதுக்கீடு கொண்டு வந்ததன் நோக்கம் குறித்து ராஜபாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. விளக்கம் அளித்தார்.

பொதுக்கூட்டம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் ஆதித்தமிழர் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் 251-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழர் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடந்தது. ஆதித்தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ஜக்கையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அவருக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசும் போது கூறியதாவது:-

உயர் வகுப்பினருக்கு சமமாக அனைத்து தரப்பை சேர்ந்த குழந்தைகளும் சமுதாயத்தில் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள் என அனைத்து சமுதாயத்தில் இருந்தும் முன்னேறி வருவதற்கு இட ஒதுக்கீடு முக்கியமான காரணம். சாதி, மதத்தின் பெயரால் நம்மை பிரிக்க கூடியவர்களுக்கு எந்த காலத்திலும் இடம் அளித்து விடக்கூடாது என்பதை மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாளில் நாம் சூளுரையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தந்தை பெரியார் மண்ணில் விதைத்த சுயமரியாதை உணர்வை தகர்த்து, பகுத்தறிவை உடைக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதை உணர்ந்து அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றினால் வேறு யாராலும் தமிழகத்திற்குள் காலுன்ற முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

வேறுபாடு உண்டு

இதைதொடர்ந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது, அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்த அனைவரும் அதிகமாக படித்து பட்டங்கள் பெற வேண்டும், அரசு வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக தான் 3 சதவீத உள் ஒதுக்கீட்டை கருணாநிதி வழங்கினார். மற்ற கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் வேறுபாடு உண்டு. மற்ற கட்சியினர் தேர்தல் சமயத்தில் வாக்கு வாங்குவதற்காக உங்கள் சமுதாயத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் கருணாநிதி தாழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை கை தூக்கி விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது, இந்தியாவின் வரலாறு காவிரி கரையில் இருந்து எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வரலாறு கங்கை கரையில் இருந்து எழுதப்பட்டு விட்டது. நாகரிக வளர்ச்சி குறித்து ஆய்வாளர்கள் தங்கள் பங்கை செலுத்த வேண்டும் என்றார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள், தங்கபாண்டியன், டாக்டர் ரகுராமன், சதன் திருமலைக்குமார், அப்துல் சமது, முன்னாள் எம்.பி. லிங்கம் மற்றும் ஆதி தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்