வினேஷ் போகத்தின் தீரம் வியப்புக்கும், பாராட்டுதலுக்கும் உரியது - எடப்பாடி பழனிசாமி

இறுதிச்சுற்று வரை முன்னேறிய வினேஷ் போகத்தின் தீரம் வியப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2024-08-07 15:53 GMT

கோப்புப்படம் 

சென்னை,

பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அவர், இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அவர் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தொடரில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

இதன் மூலம் வினேஷ் போகத்தின் பதக்க கனவு தகர்ந்தது. வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது 140 கோடி இந்தியர்களின் தங்கக் கனவை தகர்த்துள்ளது என்றால் அது மிகையாகாது என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

பாரீஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் 50 கிலோ எடைப்பிரிவிற்கான மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அவர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வான நிலையில், இன்று காலை அவரது உடல் எடை குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் 100 கிராம் அதிகமாக உள்ளதாகக் கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது 140 கோடி இந்தியர்களின் தங்கக் கனவை தகர்த்துள்ளது என்றால் அது மிகையாகாது.

பல்வேறு போராட்டங்களைக் கடந்து, இறுதிச்சுற்று வரை முன்னேறிய வினேஷ் போகத்தின் தீரம் வியப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. இனி இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாவண்ணம் வீரர்-வீராங்கனைகளுக்கான உடற்தகுதியை உரிய முறையில் கண்காணித்து உறுதிசெய்யுமாறு மத்திய அரசையும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தையும் வலியுறுத்துகிறேன்.

பதக்கங்கள் வரும் போகும்; நம் நாட்டின் வீரர்-வீராங்கனைகள் என்றைக்கும் நமக்கு தங்கங்கள் தான். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்