சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் - பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி

தமிழ் மொழி, தமிழர் கலாசாரத்தை பாதுகாக்கிற முயற்சியாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-05 09:05 GMT

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

உலகில் முதல் முறையாக சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள, பாரதப் பிரதமர் மோடிக்கு, உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற அனைத்து தமிழர்கள் சார்பாகவும் முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்கள் பெருமை கொள்ளும் விதமாக அறிவித்துள்ள இந்த அறிவிப்பின் மூலமாக, பன்னெடுங்கால பழமை வாய்ந்த தமிழர் கலாசாரம் விண்ணளவு உயரும் என்கிற மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

பன்முகம் கொண்ட இந்தியாவின் பழமையான வரலாற்றில், உலகின் மிகவும் தொன்மையான மொழியாக தமிழ் இருந்து வருகிறது என்று எப்போதும் கூறி வரும் நமது பிரதமர் அவர்கள், தற்போது தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கிற முயற்சியாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

சிங்கப்பூரில் அமையவிருக்கிற இந்த கலாசார மையமானது, உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களை, மொழி, கலாசாரம் மற்றும் வரலாற்று ரீதியாக இணைக்கின்ற பாலமாக அமையும். பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு தேசங்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைக்கும் மையமாகவும், இந்த கலாசார மையம் செயல்படும்.

முன்பு, பிரான்ஸ் நாட்டின் செர்ஜி நகர் உள்ளிட்ட வெளிநாடுகளில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தும், ஐநா சபை போன்ற உலகின் மாபெரும் அரங்குகளில் திருக்குறளையும், தமிழ் இலக்கிய வரிகளையும் குறிப்பிட்டு பெருமைப்படுத்தி வரும் நமது பாரத பிரதமரின் குறிப்பிடத்தக்க சாதனையாக இந்த அறிவிப்பை பார்க்கிறோம்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்