நடுக்கடலில் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை கோர்ட்டு விடுவித்தது

நடுக்கடலில் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை கோர்ட்டு விடுவித்தது. இவர்கள் விரைவில் ராமேசுவரம் திரும்ப உள்ளனர்.

Update: 2023-06-21 18:39 GMT

ராமேசுவரம், 

நடுக்கடலில் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் இலங்கை கோர்ட்டு விடுவித்தது. இவர்கள் விரைவில் ராமேசுவரம் திரும்ப உள்ளனர்.

9 மீனவர்கள்

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் 9 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவ்வாறு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு என்ஜின் பழுதாகி உள்ளது. அப்போது வீசிய பலத்த காற்று மற்றும் கடல் நீரோட்டத்தின் காரணமாக பழுதான விசைப்படகானது இலங்கை நெடுந்தீவை ஒட்டிய கடல் பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பாறை மீது ஏறி நின்றது. அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், படகில் ஏறி சோதனை செய்ததுடன் அந்த படகில் இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 9 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.

விடுவிப்பு

இதனிடையே கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் நேற்று ஊர்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது படகு பழுதானதால் கடல் நீரோட்டத்தின் காரணமாக இலங்கை கடல் பகுதிக்குள் இந்த படகு வந்தது தெரியவந்தது. இதனால் 9 மீனவர்களையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள் மெரிகானா கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதுபோல் இந்த மீன்பிடி படகை அரசு அனுமதியுடன் வந்து மீட்டு செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

விடுவிக்கப்பட்ட 9 மீனவர்களும் ஓரிரு நாளில் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்