கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 50 நிமிடம் தாமதமாக புறப்பட்டது

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிரேக் பழுது ஏற்பட்டதால் 50 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2023-09-11 22:00 GMT

நாகர்கோவில்:

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிரேக் பழுது ஏற்பட்டதால் 50 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

பிரேக் பழுது

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தினமும் மாலை 5.45 மணிக்கு புறப்படும். அதன்படி நேற்று மாலையில் ரெயில் புறப்பட்டது. அப்போது ரெயிலில் பிரேக் சரியாக பிடிக்கவில்லை.

இதனை அறிந்த டிரைவர் ரெயிலை நிறுத்தி இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் வைத்து ரெயிலில் ஏற்பட்ட பிரேக் பழுதை நீக்கும் முயற்சியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

2 ரெயில்கள் தாமதம்

சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு பிரேக்கில் ஏற்பட்ட பழுது முற்றிலுமாக நீக்கப்பட்டது. இதனால் மாலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 50 நிமிடங்கள் தாமதமாக 6.35 மணிக்கு புறப்பட்டது. மேலும் இந்த ரெயில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு 6.49 மணிக்கு வந்தடைந்தது.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதம் காரணமாக நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு வரை செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7.15 புறப்பட வேண்டிய நிலையில், 35 நிமிடங்கள் தாமதமாக 7.50 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்