ரெயில்முன் பாய்ந்து கல்லூரி முதல்வர் தற்கொலை

ரெயில்முன் பாய்ந்து கல்லூரி முதல்வர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-30 23:51 GMT

மதுரை,

மதுரை விளாங்குடி ரெயில்வே கேட் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி கிடந்தார்.

இதுகுறித்து அறிந்த மதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ரெயிலில் அடிபட்டு கிடந்த நபரின் உடல் பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த நபர் யார், அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பதை அறிய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

கல்வியியல் கல்லூரி முதல்வர்

விசாரணையில் அவர், கோவை மாவட்டம் நால்வர் நகரை சேர்ந்த பாலன்நாயர் மகன் சுபாஷ்கிருஷ்ணன் என்றும், தனியார் கல்வியியல் கல்லூரி முதல்வராக பணியாற்றி வந்தவர் என்றும் தெரியவந்தது.

இவருக்கும், மதுரை அண்ணாநகரை சேர்ந்த சண்முகப்பிரியா என்பவருக்கும் திருமணம் நடந்து ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்தனர்.

இவர்களது விவாகரத்து வழக்கு மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது. இதனால் சுபாஷ்கிருஷ்ணன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வழக்கிற்காக நேற்று முன்தினம் கோவையில் இருந்து காரில் மதுரை வந்த அவர், விசாரணைக்கு ஆஜரானார். பின்னர், மனைவியின் நகைகளை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் ஒப்படைத்துள்ளார்.

தேஜஸ் ரெயில்

அதைதொடர்ந்து விளாங்குடி ரெயில்வே கேட் அருகே சென்ற அவர், காரை நிறுத்திவிட்டு, சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்த தேஜஸ் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதில் அவரது உடல் 2 துண்டாக சிதறி பலியானது தெரியவந்தது.

ரெயில் முன் பாய்ந்து கல்லூரி முதல்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்