'நீட்' தேர்வு தோல்விக்கு தற்கொலை தீர்வு ஆகாது - மாணவர்களுக்கு வைகோ அறிவுரை

மருத்துவப் படிப்பு இல்லாவிடில் வேறு துறைகள் உள்ளது என கூறியுள்ளார்.

Update: 2022-07-16 13:34 GMT

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு நாளை நடைபெறும் நிலையில், 'நீட்' தேர்வு பயத்தால், கடந்த 7-ந் தேதி ஓசூர் அரசனட்டி பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரது 18 வயது மகன் முரளி கிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டார். மேலும், அரியலூர் மாவட்டம் ரெயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகள் நிஷாந்தி, 'நீட்' தேர்வுக்காக தயாராகி வந்த நிலையில், தோல்வி பயம் காரணமாக இன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்று தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்கி வருவதற்கு மத்திய பா.ஜ.க. அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 'நீட்' விலக்கு சட்ட முன்வரைவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்துகிறேன்.

'நீட்' தேர்வு எழுத முற்படும் மாணவர்கள் தோல்வி பயம் காரணமாக உயிரைப் போக்கிக் கொள்ளும் மனநிலைக்கு ஆளாகக் கூடாது. தற்கொலை என்பது தீர்வு ஆகாது. மருத்துவப் படிப்பு இல்லாவிடில் வேறு துறைகளில் முயன்று படித்து வாழ்வில் உயர முடியும் என்ற நம்பிக்கையை நெஞ்சில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.       

Tags:    

மேலும் செய்திகள்