உரிமம் இன்றி, காலாவதியான விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை-வேளாண் அதிகாரி எச்சரிக்கை

உரிமம் இன்றி, காலாவதியான விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2022-10-26 19:15 GMT

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் விதை விற்பனையாளர்கள் தங்களுக்கு தேவையான நெல், சிறுதானியங்கள், பயிறு, எண்ணெய் வித்து பயிர்களுக்கான விதைகளை வாங்கும்போது விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் வழங்கப்படும் விதை விற்பனை உரிமம் பெற்ற நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும். விவசாயிகள் விற்பனை ரசீது மற்றும் விதை மூட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள விவர அட்டை ஆகியவற்றை பயிர் அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்யும்போது வழங்கப்படும் ரசீதில் குவியல் எண், காலாவதிநாள், விற்பனை விலை ஆகியவற்றுடன் விவசாயினுடைய கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். மேலும், விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், விதை விற்பனை பட்டியல் ஆகியவற்றை விதை சட்டப்படி பராமரிக்க வேண்டும். உண்மை நிலை விதைகளுக்கு விதைச்சான்று துறையால் வழங்கப்படும் பதிவுசான்றிதழ் மற்றும் விதை ஆய்வு அறிக்கை ஆகியவற்றை விதை உற்பத்தியாளரிடம் இருந்து பெற்று விற்பனை செய்ய வேண்டும். விற்பனை பலகையில் விதை இருப்பு, ரகம், நிலை, விற்பனை விலை ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். காலாவதியான விதைகளை விற்றாலோ, உரிமம் இல்லாமல் விற்பனை செய்தாலோ விதை சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும். விதை விற்பனையாளர்கள் ஒவ்வொரு மாதமும் தாங்கள் விற்பனை மற்றும் இருப்பு விவரத்தை விதைச்சான்றுதுறை இணையதளத்தில் (SPECS) பதிவேற்றம் செய்ய வேண்டும் அல்லது அறிக்கையாக விதை ஆய்வு துணை இயக்குனர் திருச்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்