எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 24,439 பேர் எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 24,439 பேர் எழுதினர். 1,052 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2023-04-06 19:23 GMT

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி கடந்த 3-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதேபோல் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதற்காக புதுக்கோட்டையில் மொத்தம் 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் தேர்வு நேற்று நடைபெற்றது. இதையடுத்து, பள்ளி மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு மையங்களுக்கு சென்றனர். தேர்வு எழுத செல்லும் தங்களின் மகன், மகள்களை பெற்றோர் ஆசீர்வதித்தும், வாழ்த்து கூறியும் அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ-மாணவிகளை வாழ்த்தி தேர்வு மையத்திற்குள் அனுப்பினர். மேலும் மாணவ- மாணவிகளும் ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

1,052 பேர் தேர்வு எழுதவில்லை

தேர்வு எழுத செல்வதற்கு முன்பு ஆசிரியர்கள் விடைத்தாளில் எங்கே தேர்வு எண் எழுத வேண்டும். கேள்விதாள்களை படிப்பதற்கான நேரம் மற்றும் தேர்வு எழுதுவதற்கான நேரம் ஆகியவற்றை மாணவ-மாணவிகளுக்கு விளக்கி கூறினர். மேலும் மாணவ-மாணவிகள் அச்சமின்றி தேர்வு எழுத தைரியம் அளித்தனர். மாணவ-மாணவிகள் பள்ளியின் முன் வைக்கப்பட்டிருந்த பலகையில் தங்களின் தேர்வு அறை எது என்பதை பார்த்து தெரிந்து கொண்டனர்.

மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை மாணவர்கள் 12 ஆயிரத்து 609 பேரில் 11 ஆயிரத்து 896 பேரும், மாணவிகள் 12 ஆயிரத்து 882 பேரில் 12 ஆயிரத்து 543 பேரும் என மொத்தம் 24 ஆயிரத்து 439 பேர் தேர்வு எழுதினர். மாணவர்கள் 713 பேரும், மாணவிகள் 339 பேரும் என மொத்தம் 1,052 பேர் தேர்வு எழுதவரவில்லை.

பறக்கும் படையினர் ஆய்வு

தேர்வு மையத்தில் மாணவ-மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு மையம் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகள் ஆசிரியை உதவியுடன் தேர்வெழுதினர். தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

வருகிற 10-ந் தேதி ஆங்கில பாடத்தேர்வும், 13-ந் தேதி கணித தேர்வும், 17-ந் தேதி அறிவியல் தேர்வும், 20-ந் தேதி சமூக அறிவியல் பாடத்துடன் தேர்வு நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்