மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
காளையார்கோவில் மின்வாரிய அலுவலகத்திற்கு அருகில் உள்ள திருநகர் பகுதியில் நீண்ட காலமாக குறைந்த மின்னழுத்தத்தினால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்ததும் மின்வாரிய உதவி பொறியாளர் ராஜாஜி, உதவி செயற்பொறியாளர் அன்புநாதன், காளையார்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக இடத்தை தேர்வு செய்து ஒரு வார காலத்திற்குள் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.