தீபாவளி பண்டிகையையொட்டி மாம்பலம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

Update: 2022-10-17 13:40 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கென, எராளமான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். தீபாவளி நெருங்குவதால் தற்போது தியாகராய நகரில், மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக மாம்பலம் ரெயில் நிலையத்தில் புற்று ஈசல் போல் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

எனவே, ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகளின் பாதுகாப்பு கருதியும் ரெயில்வே பாதுகாப்பு படையின், சென்னை கோட்ட மூத்த பாதுகாப்பு கமிஷனர் செந்தில் குமரேசன் உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கூடுதலாக ரெயில்வே பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மாம்பலம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பர்ஷா பர்வீன் தலைமையில் கூடுதலாக 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 15-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மோப்பநாய் உதவியுடன் ரெயில் நிலையம் முழுவதும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்