விபத்துகளை தடுக்க நொய்யல் குறுக்குச்சாலையில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை

விபத்துகளை தடுக்க நொய்யல் குறுக்குச்சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-06 19:11 GMT

ஈரோடு-திருச்சி நெடுஞ்சாலை

கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்குச்சாலை வழியாக ஈரோடு-திருச்சி, திருச்சி-ஈரோடு செல்லும் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தார்சாலை வழியாக திருச்சியில் இருந்து கரூர், புன்னம்சத்திரம், நொய்யல், கொடுமுடி, மலையம்பாளையம், கணபதிபாளையம், ஈரோடு, வெள்ளக்கோவில், கொளாநல்லி, ஊஞ்சலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், அதேபோல் ஈரோடு பகுதியில் இருந்து கரூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், திருநள்ளாறு, மயிலாடுதுறை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், திருச்செங்கோடு, நாமக்கல், பரமத்திவேலூர் பகுதிகளில் இருந்து கோவை, ஈரோடு, பல்லடம், காங்கேயம், முத்தூர், திருப்பூர், சிவன்மலை, அரவக்குறிச்சி, ராஜபுரம், பரமத்தி, சின்னதாராபுரம், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்களும், லாரிகள், சரக்கு வாகனங்கள், கார்கள் 24 மணி நேரமும் சென்று வருகின்றன.

கல்குவாரிகள்

இதேபோல் குப்பம், பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் இருந்து அரளைக்கல், சம்பட்டிகள், பல்வேறு ரகமான ஜல்லிக்கற்கள், மணல் போன்றவற்றை ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் நொய்யல் குறுக்குச்சாலை வழியாக நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன. இந்தநிலையில் கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், வேலாயுதம்பாளையம் பகுதிகளிலிருந்து பரமத்திவேலூர்- கொடுமுடி செல்லும் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் நெடுஞ்சாலையை கடக்கும் போது அதிவேகமாக செல்வதால் ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் இறந்தும், பலர் உடல் உறுப்புகளை இழந்தும் உள்ளனர். எனவே நொய்யல் குறுக்குச்சாலை நெடுஞ்சாலை பகுதியில் பரமத்திவேலூர் செல்லும் பிரிவு சாலை அருகே ரவுண்டானா அமைத்து விபத்தினை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

விபத்தில் சிக்கும் வாகனங்கள்

பயணிகள் ஆட்டோ டிரைவர் குமார்:- நொய்யல் குறுக்குச்சாலை வழியாக இருபுறமும் ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பரமத்திவேலூர்- கொடுமுடி செல்லும் சாலை வழியாக வரும் வாகனங்கள் ஈரோடு- திருச்சி சாலைக்கு வரும்போது பிரிவு சாலை இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி கொள்கின்றன. எனவே இந்த இடத்தில் ரவுண்டானா அமைத்து விபத்தை தடுக்க வேண்டும்.

அடிக்கடி விபத்து

நொய்யல் குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் வீரக்குமார்:- நொய்யல் குறுக்குச்சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு நான் சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்கிறேன். இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அப்போது பரமத்திவேலூர் பிரிவு சாலை வழியாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. அதேபோல் விபத்தில் சிக்கியவர்கள் உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் ரவுண்டானா அமைத்தால் இந்த இடத்தில் நடைபெற்று வரும் விபத்தை தவிர்க்க முடியும். எனவே ரவுண்டானா அமைத்து உயிரிழப்பை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள்

லாரி டிரைவர் பழனிச்சாமி:- நான் இந்த வழியாக செங்கற்களை ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று இறக்கி வருகிறேன். நொய்யல் குறுக்குச்சாலை வழியாகவும், பரமத்திவேலூர் சாலை வழியாகவும் ஏராளமான வாகனங்கள் அதிவேகத்தில் சென்று வருகின்றன. பரமத்தி வேலூர் செல்லும் பிரிவு சாலைக்கு வாகனத்தை திருப்பும் போது எதிரே வரும் வாகனங்கள் சாலையில் செல்லும்போது அதை பார்க்காமல் பல வாகன ஓட்டிகள் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே நொய்யல் குறுக்குச்சாலை பகுதியில் பரமத்திவேலூர் செல்லும் பிரிவு சாலை அருகே ரவுண்டானா அமைத்துக் கொடுத்தால் வாகன விபத்தை தடுக்க இயலும்.

உயிரிழப்பை தடுக்க இயலும்

விவசாயி முருகேசன்:-நொய்யல் குறுக்குச்சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் அடிக்கடி சென்று வருகிறேன். சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் விவசாய தோட்டங்களுக்கு யூரியா, காம்ப்ளக்ஸ், சல்பேட், பொட்டாஷ் உள்ளிட்ட பல்வேறு வகையான இடுபொருட்களை ஏற்றி செல்கிறேன். அப்போது எதிரே வரும் பல்வேறு வாகனங்களால் குறுக்கு சாலை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. அதேபோல் வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்து நொய்யல் குறுக்குச்சாலைக்கு செல்லும் வாகனங்கள் இந்த நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. ஜல்லிக்கற்கள், மணலை ஏற்றி செல்லும் லாரிகள் அதிகமாக தார் சாலையிலிருந்து பிரிவு சாலைக்கு செல்லும்போதும் விபத்து ஏற்படுகிறது. எதிரேவரும் வாகனத்தை பார்க்காமல் லாரியை ஓட்டுகிறார்கள். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரிவு சாலைக்கு வாகனத்தை திருப்பும் போதும் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதேபோல் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் முன்னால் செல்லும் வாகனங்கள் மீது பின்னால் வரும் வாகனங்கள் இடித்தும் விபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே பரமத்திவேலூர் செல்லும் பிரிவு சாலையில் நெடுஞ்சாலையின் குறுக்கே ரவுண்டானா அமைப்பதால் விபத்துக்களை தடுக்க இயலும், உயிரிழப்பையும் தடுக்க இயலும்.

வாகன விபத்தை குறைக்கலாம்

ஆம்புலன்ஸ் டிரைவர் நவீன்:- நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் உள்ள பரமத்தி வேலூர் பிரிவு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவரை எனது ஆம்புலன்சில் ஏற்றி பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளேன். இதில் பல உயிரிழப்புகளும், பலருக்கு உடல் உறுப்பு இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த வழியாக ஜல்லிக்கற்கள் கொண்டு செல்லும் லாரிகளும், அதேபோல் நெடுஞ்சாலை வழியாக செல்லும் பல்வேறு வாகனங்களும் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே பரமத்தி வேலூர் பிரிவு சாலையில் உள்ள நெடுஞ்சாலையில் ரவுண்டானா அமைத்தால் வாகன விபத்தை குறைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்