பொதுமக்கள் சாலை மறியல்

பாவூர்சத்திரம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2023-08-25 20:43 GMT

பாவூர்சத்திரம்:

வெய்க்காலிபட்டியில் இருந்து பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படும் தாமிரபரணி குடிநீர் திட்ட குழாய் திப்பணம்பட்டி ஊராட்சி வழியாக வருகிறது. இதில் திப்பணம்பட்டி பகுதியில் பைப் லைனில் வெளியேறும் குடிநீரை திப்பணம்பட்டி, மீனாட்சிபுரம், கொண்டலூர், நாட்டார்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பிடித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த அந்த பைப் லைனில், குடிநீர் வீணாக செல்வதாக கூறி நேற்று திடீரென தண்ணீர் வெளியேறுவதை அதிகாரிகள் அடைத்தார்களாம். இதனை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாவூர்சத்திரம்-கடையம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த தென்காசி தனுஷ்குமார் எம்.பி, பழனிநாடார் எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே.ஜெயபாலன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்பகுதியில் புதிதாக சின்டெக்ஸ் அமைத்து தாமிரபரணி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும், அதுவரை வழக்கம் போல் அந்த பைப்பில் குடிநீரை பிடித்து கொள்ளலாம் என தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்