சாலையோர வியாபாரிகளுக்கு 100 தள்ளுவண்டிகள் வாங்க திட்டம்

பொள்ளாச்சி நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு 100 தள்ளுவண்டிகள் வாங்க திட்டமிட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-08-11 19:30 GMT


பொள்ளாச்சி


பொள்ளாச்சி நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு 100 தள்ளுவண்டிகள் வாங்க திட்டமிட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


கடனுதவி முகாம்


சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் சுயசார்பு நிதி திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் பிணையில்லா கடன்கள் வழங்கப்படுகிறது. இந்த கடன் மூலம் வியாபாரிகள் வணிகத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி நகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது.


முகாமில் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. முகாமில் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளார் ஸ்ரீதேவி, நகரமைப்பு அலுவலர் சாந்தி நிர்மலாபாய், சமுதாய அமைப்பாளர்கள் மகாதேவன், பெனாசீர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-


வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள்


பொள்ளாச்சி நகராட்சியில் 1,117 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இதில் 627 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் கடனுதவி வழங்கப்படும். இதை 12 மாதங்களில் சரியாக செலுத்தினால் அடுத்தக்கட்டமாக ரூ.20 ஆயிரத்தை, 18 மாத தவணை காலத்தில் செலுத்த வேண்டும். தொடர்ந்து கடனை தவணை காலத்திற்குள் செலுத்தும் வியாபாரிகளுக்கு 3-வது கட்டமாக ரூ.50 ஆயிரம் கடனுதவி வழங்கப்படும். இதை 36 மாத தவணைகளில் செலுத்தி கொள்ளலாம். இதற்கு 6 மாதங்கள் நடைபாதைகளில் வியாபாரம் செய்யும் நபராக இருக்கவும், 60 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவும் வேண்டும். நகராட்சி பகுதிகளில் வசிக்கவும், வங்கி சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் நபர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியான நபர்களாகும். இந்த திட்டத்தில் நகராட்சி பகுதியில் 100 பேருக்கு தள்ளுவண்டிகள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 26 வாகனங்கள் வந்து உள்ளன. ஜூஸ், உணவகம், பூ விற்பனை செய்வதற்கு ஏற்றவாறு வண்டிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்