ஜெயங்கொண்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 183 நில ஆர்ஜித வழக்குகளுக்கு உடனடி தீர்வு

ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 183 நில ஆர்ஜித வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Update: 2023-07-13 18:30 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. இதையடுத்து, அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய கிறிஸ்டோபர் உத்தரவின் பேரில், அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அழகேசன் தலைமையில் ஜெயங்கொண்டத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 183 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) வேலுமணி மற்றும் தேவகி ஆகியோர் கூறினர். மக்கள் நீதிமன்றத்தில் அரசு வக்கீல்கள் மோகன்ராஜ், செந்தில்குமார் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்