தம்மம்பட்டியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
தம்மம்பட்டியில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
தம்மம்பட்டி:
சாலைமறியல்
தம்மம்பட்டி பகுதியில் நேற்று காலை 10.30 மணி அளவில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் பதில் கேட்டும் சரியான பதில் இல்லை என கூறப்படுகிறது. எனவே அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் காந்திநகர் பகுதி மக்கள் ஆத்தூர்- தம்மம்பட்டி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதற்கிடையே உடையார்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் மர சிற்ப வேலை செய்யும் சிற்பிகள் திரண்டு மின்தடையை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
நடவடிக்கை
இதுதொடர்பாக மின்வாரிய உதவி செயற்பொறியாளிடம் கேட்ட போது, மின்தடை தொடர்பாக பணியாளர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதற்கிடையே தம்மம்பட்டி- திருச்சி சாலையில் மின்தடையை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே இரவு 8.40 மணி அளவில் மின்சார வினியோகம் சீரானது.