ராகுல்காந்தி பிரதமராக வந்தால்தான்கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை தீரும் - மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி

ராகுல்காந்தி பிரதமராக வந்தால் தான் கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை தீரும் என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

Update: 2023-08-29 21:46 GMT

திருமங்கலம், 

ராகுல்காந்தி பிரதமராக வந்தால் தான் கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை தீரும் என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

திருமண மண்டபம் திறப்பு

திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாசவனத்தம் கிராமத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை விருதுநகர் எம்.பி.மாணிக்கம்தாகூர் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து சேர்வைக்காரன்பட்டியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார்.

மேலும் சென்னம்பட்டி போத்தநதி புதுப்பட்டி கிராம பகுதிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களை நேரில் சந்தித்து 100 நாள் வேலை குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அவர்களிடம் பேசும்போது செப்டம்பர் 15-ந்தேதி மாநில அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு உரிமை தொகை ஆயிரம் வழங்க உள்ளார் அதேபோல ராகுல் காந்தி பிரதமராக வந்தால் ரூ.5 ஆயிரம் மாதம் தோறும் வழங்க உள்ளார் என தெரிவித்தார்.

கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை

இதை தொடர்ந்து மாணிக்கம்தாகூர் எம்.பி.கூறியதாவது:-

100 நாள் வேலை திட்டத்தை 150 நாள் திட்டமாக மாற்ற வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசு உரிய சட்ட திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

கப்பலூர் சுங்கச்சாவடியில் முன்னுக்கு பின் புறம்பான பேச்சுகளை பேசுகின்றார்கள். மத்திய மந்திரி நிதின் கட்கரி சந்தித்து மனு கொடுத்தோம். 3 மாதத்தில் தீர்வு காணப்படும் என வாக்குறுதி கொடுத்தார். இப்போது 8 மாதமாகிவிட்டது எந்த நடவடிக்கையும் இல்லை. கப்பலூர் டோல்கேட்டை மேலக்கோட்டைக்கு மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை. அது நடக்க வேண்டும் என்றால் ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும். பா.ஜனதா அரசு இருக்கும் வரை கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்