மதவெறி பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையை காத்திடும்: முதல்-அமைச்சர் அறிக்கை

மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையை காத்திடும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-22 00:06 GMT

சென்னை,

ஒரு நூற்றாண்டுக்கு முன் உதித்த திராவிட சூரியன் நம் தலைவர் கருணாநிதி. 14 வயதிலிருந்து தன் போராட்ட கதிர்களை வீசி, தமிழ் மொழியையும் தமிழினத்தையும், தமிழ்நாட்டையும் கடைசிவரை ஒளி திகழச்செய்த சூரியன் அவர். சின்ன கிராமமான திருக்குவளையில் பிறந்து, சிறிய நகரமான திருவாரூரில் வளர்ந்தவர். தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் கொள்கை வழி ஏற்றுக்கொண்டு, அவர்கள் காட்டிய பாதையில் பொதுவாழ்வு பயணத்தை மேற்கொண்டவர்.

13 தேர்தல் களங்களில் தோல்வியே காணாமல் வெற்றிகண்டு, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக 5 முறை பொறுப்பேற்று, இந்திய அரசியலின் மூத்த தலைவராக விளங்கியவர் கருணாநிதி. அவரை எதிர்காலத் தலைமுறை அறிந்து கொள்ளவேண்டியது அவசியம். தளராத முயற்சியுடன், திட்டமிட்ட இலக்கு நோக்கி, அயராது உழைத்தால் எளிய மனிதனும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும் என்ற நம்பிக்கையைப் பெறுவதற்கும் திருவாரூரில் உயர்ந்து நிற்கிறது கலைஞர் கோட்டம்.

அமைச்சர் எ.வ.வேலு

பொதுப்பணித்துறை-நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஒட்டுமொத்த கோட்டத்தின் கட்டுமானத்தையும் கவனமுடன் மேற்பார்வையிட்டு அதன் எழிலை உறுதிசெய்திருக்கிறார். திருவாரூர் சகோதரிகளின் மங்கள இசை, கவிப்பேரரசு வைரமுத்து தலைமையிலான கவியரங்கம், நடுவர் சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றம், இன்னிசை வழங்கிய மாலதி லட்சுமன் குழுவினரின் பாட்டரங்கம் என காலையில் தொடங்கி மாலைவரை தலைவரின் பன்முகத்தன்மையை எடுத்துரைத்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தேன் சுவை.

நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, பீகார் மாநில துணை முதல்-மந்திரி தேஜஸ்வி வருகை தந்து திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்ததுடன், இந்தியாவின் ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் காப்பதற்கு கருணாநிதியின் வாழ்க்கை எப்படி துணையாக நின்று வழிகாட்டுகிறது என்பதை விளக்கினார். உடல்நலக்குறைவால் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரால் வர இயலாவிட்டாலும், தன் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் உரையாக எழுதி, இந்திய அரசியல் களத்தில் கருணாநிதி இன்றும் எப்படி வழிகாட்டியாக திகழ்கிறார் என்பதை விளக்கியிருந்தார். அதன் தமிழாக்கத்தை திருச்சி சிவா எம்.பி., உணர்வுபூர்வமாக எடுத்துரைத்தார்.

விடிவுக்கான ஒளி

கலைஞர் கோட்டத்தை திறக்கின்ற பெரும் வாய்ப்பு எனக்கு வாய்த்த நிலையில், கோட்டத்தினை பார்வையிட்ட சிறப்பு விருந்தினர்கள், கட்சி நிர்வாகிகள் எல்லாரும் கண்கள் விரிந்திட, கலைஞரின் பேராற்றலை கண்டு வியந்தனர். 'சாதாரண மனிதர்களிடமிருந்துதான் ஒரு சகாப்தத்தின் விடிவுக்கான ஒளி கிளம்புகிறது' என்கிற கலைஞரின் பொன்மொழியே அவரது வாழ்க்கையாகவும் அவரது நூற்றாண்டு செய்தியாகவும் அமைந்திருப்பதை அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்கள், ஆவணங்கள் வாயிலாக அறிகின்ற யார்தான் ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்?

கருணாநிதியை நேரில் பார்க்க வாய்ப்பில்லாத தலைமுறையினர், இந்த கோட்டத்துக்கு வந்து அவரது வாழ்க்கை வரலாற்றை, சளைக்காத போராட்டத்தை, தொலைநோக்கு திட்டங்களை, நிகரற்ற படைப்பாற்றலை தெரிந்து கொள்ளும்போது, இப்படிப்பட்ட அற்புத தலைவரை பார்க்காமல் போய்விட்டோமே என்ற ஏக்கத்தை தணிக்கும் வாய்ப்பு இது.

பாட்னா புறப்பட...

பள்ளி-கல்லூரி மாணவ செல்வங்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் திருவாரூர் திருத்தலத்தில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்கவேண்டும். நூற்றாண்டு நாயகர் கலைஞரின் 80 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வை அறிந்திடவேண்டும். முத்தமிழறிஞர் பிறந்து, வளர்ந்த காலத்தில் திருவாரூர் எப்படி இருந்தது, இன்று அந்த நகரம் மாவட்ட தலைநகராக்கப்பட்டு, மத்திய பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பல்வேறு கட்டமைப்புகளை கொண்டதாக வளர்ச்சியடைந்திருப்பதற்கு காரணம் கருணாநிதி தான் என்பதை கோட்டத்துக்கு வருகின்ற ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளமுடியும்.

கோட்டத்தை காணும்போது உடன்பிறப்புகளின் உள்ளத்தில் உத்வேகம் பிறக்கும். அந்த உத்வேகத்தை கலைஞர் கோட்டம் திறப்பு விழா நாளில் நானும் பெற்றேன். கோட்டத்தில் உள்ள திருமண அரங்கில் 4 இணையர்களுக்கு சுயமரியாதை திருமணத்தை எளிய முறையில் நடத்தி வைத்து, கலைஞர் கட்டிக்காத்த பெரியார், அண்ணா கொள்கைகளுக்கு வலிமை சேர்த்தோம். கொள்கை வலிவும் இயக்க உணர்வும் பெருகிட திருவாரூர் திருத்தலத்தின் நிகழ்வுகளை தொடர்ந்து, பாடலிபுத்திரம் என வரலாற்றில் பெயர் பெற்ற பாட்னா நகருக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன்.

ஜனநாயக போர்க்களம்

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நான் உரையாற்றியது போல, இந்தியாவை காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது. மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையை காத்திடும். அதற்கான முன்னெடுப்பை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் மேற்கொண்டிருக்கிறார். ஜூன் 23-ந்தேதி (நாளை) பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனை கூட்டத்தில், காலமெல்லாம் மதநல்லிணக்க கொள்கையை வலியுறுத்திய கலைஞரின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன். இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை, ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்கான இந்த முன்னெடுப்பு 2024 நாடாளுமன்ற தேர்தலில் நல்ல விளைவை தரும் என்ற நம்பிக்கை மிகுந்திருக்கிறது. கலைஞருக்கு கோட்டம் கண்டோம். அவர் வழியில் ஜனநாயக போர்க்களத்தை சந்தித்து நாட்டு நலன் காண்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்