பாம்பு கடித்து மூதாட்டி சாவு

கணியம்பாடி அருகே பாம்பு கடித்து மூதாட்டி இறந்தார்.

Update: 2023-08-20 11:43 GMT

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி, மேதலபாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 70). இவரது மனைவி ரேவதி (68). இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கண்ணன் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து ரேவதி மகன்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு ரேவதி வீட்டின் வாசலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் அங்கு ஊர்ந்து வந்த நாகப்பாம்பு ரேவதியை கடித்துவிட்டு அருகில் இருந்த புதருக்குள் சென்று விட்டது.

வலி தாங்க முடியாமல் ரேவதி கூச்சலிட்டார். உடனடியாக குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 18-ந் தேதி ரேவதியின் வீட்டு வாசலில் இருந்த நாயும் பாம்பு கடித்து இறந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்