மதுரை ஐகோர்ட்டு உள்பட கோர்ட்டுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி வசூலித்து மோசடி-நீதிபதி கையெழுத்தை போலியாக போட்டு பணி ஆணை வழங்கியவர் கைது

மதுரை ஐகோர்ட்டு உள்பட கோர்ட்டுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி வசூலித்து மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-29 20:33 GMT


மதுரை ஐகோர்ட்டு உள்பட கோர்ட்டுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி வசூலித்து மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கோர்ட்டுகளில் வேலை

மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் பெருங்குடி அருகே உள்ள டோல்கேட்டில் வேலை பார்த்து வந்தார். வளையங்குளத்தை சேர்ந்த சதீஸ்வரன் என்பவரும் அதே இடத்தில் வேலை பார்த்து உள்ளார். அப்போது அவர் ஜெயச்சந்திரனுடன் நட்பாக பழகினார்.

மேலும் அவரிடம் நான் இங்கு பகுதி நேரமாகத்தான் வேலை பார்க்கிறேன். மதுரை ஐகோர்ட்டு அலுவலகத்தில் உதவியாளராகவும் உள்ளேன். எனவே எனக்கு அங்குள்ள நீதிபதிகள், பதிவாளர் மற்றும் பல்வேறு அதிகாரிகளை தெரியும்.

ஐகோர்ட்டில் உதவியாளர் பணிகள் காலியாக உள்ளன. 3 லட்ச ரூபாய் கொடுத்தால் உடனடியாக அங்கு வேலை கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினார். அதை நம்பிய ஜெயச்சந்திரன் நகையை அடகு வைத்து ரூ.3 லட்சத்தை அவரிடம் கொடுத்ததாக ெதரிகிறது.

ரூ.1 கோடி மோசடி

பணத்தைப் பெற்றுக் கொண்ட சதீஸ்வரன், நீதிபதி உள்ளிட்ட அதிகாரிகளின் கையெழுத்துகளை போலியாக போட்டு வேலைக்கான ஆணையும் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

உறவினர்கள், தெரிந்தவர்கள் இருந்தால் அழைத்து வாருங்கள். அவர்களுக்கும் வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். அதை நம்பி 30-க்கும் மேற்பட்டவர்கள் சுமார் ரூ.1 கோடி ரூபாய் கொடுத்து வேலை வரும் என்று நம்பி காத்து இருந்தனர்.

அப்போது அவர்கள் அனைவருக்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர் வேலைக்கான உத்தரவுகளையும், அடையாள அட்டை உள்ளிட்டவைகளையும் வழங்கி உள்ளார். மேலும் நான் சொல்லும் போதுதான் அந்தந்த பகுதியில் உள்ள நீதிமன்றங்களுக்கு சென்று வேலையில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்றும் சதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

போலீசில் புகார்

ஜெயச்சந்திரனும் அவர் கூறியது போல் வேலைக்கான உத்தரவு நகலை பெற்றுக்கொண்டு மதுரை ஐகோர்ட்டில் அவர் தெரிவித்த நபரை போய் பார்த்தார். அவரும் ஒரு மாத காலம் பயிற்சி உள்ளது. அதன்பின் நீதிபதிக்கு உதவியாளாராக சேர்ந்து கொள்ளலாம் எனக்கூறி 10 நாள் கழித்து வாருங்கள் என கூறி அனுப்பி இருக்கிறார். மீண்டும் 10 நாட்கள் கழித்து ஐகோர்ட்டுக்கு சென்று வேலைக்கான பணி நியமன ஆணையை காண்பித்த போது அது எல்லாம் போலி என தெரியவந்தது.

இதையடுத்து ஜெயச்சந்திரன், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது நீதிபதியின் கையெழுத்தை போலியாக போட்டு போலி பணி ஆணை தயாரித்தது தெரியவந்தது.

கைது

அதைதொடர்ந்து சதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த கே.கே.நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை ஐகோர்ட்டு உள்பட பல்வேறு கோர்ட்டுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை ஏமாற்றி ரூ.1 கோடி வரை மோசடி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்