மாடு மாலை தாண்டும் திருவிழா

தோகைலை அருகே மாடு மாலை தாண்டும் திருவிழா கோலாகலமாக நடந்தது.

Update: 2023-08-16 18:44 GMT

மாடு மலை தாண்டும் திருவிழா

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே வெந்தபட்டியில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு உடுமல்சீல்நாயக்கர் மந்தையில் எருதுகுட்டை கோவில் உள்ளது. இக்கோவிலில் மாரியம்மன், முத்தலாம்மன் ஆகிய சாமிகளுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.

இக்கோவிலில் மாடுமாலை தாண்டும் திருவிழாவையொட்டி கடந்த வாரம் காப்புகட்டப்பட்டது. முதல் நாள் எருதுகுட்டை உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவிழாவின் 2-வது நாளின் முக்கிய நிகழ்ச்சியாக மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது.

கைத்தட்டி ஆரவாரம்

முதலில் திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த 14 மந்தையர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து அழைத்து வரப்பட்ட அனைத்து மாடுகளுக்கு புன்னியதீர்த்தம் தெளிக்கப்பட்டு தாரை, தப்பட்டை முழக்க உடுமல்சீல்நாயக்கர் மந்தையில் இருந்து எல்லைசாமி கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டன.

அங்கு எல்லைசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மாடுகளுக்கு புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 200-க்கும் மேற்பட்ட மாடுகள் உடுமல்சீல்நாயக்கர் மந்தையில் உள்ள எல்லைக்கோட்டை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடியது. அப்போது அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

எலுமிச்சைப்பழம் பரிசு

இதில், முதல் மற்றும் 2-வதாக ஓடி வந்த மாடுகளின் மீது சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் கையில் வைத்திருந்த மஞ்சப்பொடி தூவப்பட்டு எலுமிச்சைப்பழம் பரிசாக வழங்கப்பட்டன. பின்னர் 3 கன்னி பெண்களும் எல்லை கோட்டில் இருந்து கோவிலுக்கு தேவராட்டத்துடன் அழைத்து செல்லப்பட்டனர்.

நேற்று திரளான பக்தர்கள் பொங்கல், மாவிளக்கு, கிடா வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து சாமிகளுக்கு மஞ்சல் நீராட்டுடன் கரகம் எடுத்து விடப்பட்டது. இதில் ஊர்நாயக்கர், மந்தா நாயக்கர் உள்பட திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான நாயக்கர் இனமக்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்