எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கி பலி; 6 கிலோ மீட்டர் தூரம் இழுத்து வரப்பட்ட ஆண் உடல்

எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கி ஆண் ஒருவர் பலியானார். அவரது உடல் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்து வரப்பட்டது.

Update: 2022-09-22 10:41 GMT

ரெயில் என்ஜினில் சிக்கி சாவு

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலானது, நேற்று காலை சென்னையை கடந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தை கடக்கும் போது சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்த ரெயில் டிரைவர், ஹாரன் அடித்தார்.

இதனால் பதற்றம் அடைந்த அந்த நபர், தண்டவாளத்தின் மைய பகுதி நோக்கி தவறுதலாக குதித்துவிட்டார். அப்போது ரெயில் என்ஜினின் முன்பக்க கொக்கியில் அவரது தலைபகுதி சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

6 கி.மீ. தூரம் இழுத்து வரப்பட்ட உடல்

ரெயில் என்ஜினின் முன்பகுதியில் சிக்கிய அந்த நபரின் உடல் ரெயிலில் தொங்கியவாறு இழுத்து வரப்பட்டது. இதை பார்த்த ரெயில் டிரைவர் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் சிவப்பு சிக்னல் கொடுக்கப்பட்டு அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர் என்ஜினின் முன்புறம் தொங்கியவாறு 6 கிலோ மீட்டர் தூரம் இழுத்து வரப்பட்ட உடலை ரெயில்வே போலீசார் மீட்டனர். ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினின் முன்புறம் 6 கிலோ மீட்டர் வரை ஆண் உடல் இழுத்து வரப்பட்டது ரெயில் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்