பணிக்காலத்தில் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு2 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளதுபோக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

Update: 2023-08-12 19:30 GMT

கிருஷ்ணகிரி:

பணிக்காலத்தில் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு 2 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

குளிரூட்டப்பட்ட ஓய்வறை

கிருஷ்ணகிரி புறநகர் கிளை வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் சார்பில் தர்மபுரி மண்டலத்தில் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா, ரத்ததான முகாம் நடந்தது. இதனை கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பர்கூர் மதியழகன், ஓசூர் பிரகாஷ், போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து பணிக்காலத்தில் உயிரிழந்த 54 பேரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளியில் படித்து முதல் 3 இடங்களை பிடித்த அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரொக்க பரிசுகள், டிரைவர்களுக்கு கையேடுகளை அமைச்சர்கள் வழங்கினர்.

பின்னர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

வளர்ச்சி பாதையில்..

சில மாநிலங்களில் போக்குவரத்து துறையில் பணியாற்ற கூடிய ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடியாத நிலை இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் இல்லை.

இதற்கு காரணம் முதல்-அமைச்சர் செயல்படுத்தி உள்ள மகளிருக்கு கட்டணமில்லா பயணத் திட்டம் தான். இந்த திட்டத்திற்காக அரசு வழங்கும் நிதியின் மூலம் போக்குவரத்து துறை வளர்ச்சி பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. கொரோனா காலத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் இறந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்கள் கடந்த 2 காலத்தில் ரூ.1500 கோடியையும், 3 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கும் அரசு

மீதமுள்ள தொகையை இன்னும் 4 மாதங்களுக்குள் அவர்களுக்கு வழங்கப்படும். பொதுமக்களின் பஸ் பயன்பாடு அதிகமான நிலையில் ரூ.500 கோடி மதிப்பில் 1000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்படும், 1500 பழைய பஸ்கள் புதுப்பிக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி ரூ.14 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட 100 மஞ்சள் நிற பஸ்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களை பாதுகாக்கும் அரசாக செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக சேலம் கோட்டம் மேலாண்மை இயக்குநர் பொன்முடி, தர்மபுரி மண்டல பொது மேலாளர் செல்வம், தொழில்நுட்ப பொதுமேலாளர் ரவிலட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலைநாகராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் செங்குட்டுவன், முருகன், நரசிம்மன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினிசெல்வம், நகராட்சி தலைவர் பரிதாநவாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்