காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-18 19:41 GMT

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசை அனுமதி்க்கக்கூடாது. டெல்டா விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 22-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கூடாது. மீறி திறந்தால் போராட்டம் நடத்துவோம் என்று கர்நாடக அரசுக்கு அம்மாநில பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்து இருந்தார். அவரை கண்டித்து திருச்சியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நேற்று காலை முக்கொம்பு சென்றனர். அங்கு காவிரி ஆற்றில் இறங்கி 5 அடி ஆழ தண்ணீரில் நின்று கொண்டு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தினர். அப்போது, விவசாயிகள் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியை கண்டித்து கோஷம் எழுப்பினர். சுமார் 1 மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது.

தகவல் அறிந்த போலீசார், ஸ்ரீரங்கம் தாசில்தார் சிவக்குமார் மற்றும் பொதுப்பணித்துறையினர், தீயணைப்பு துறையினர் பரிசல்களில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 12 விவசாயிகளை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என்று எச்சரிக்கை செய்து அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்