விவசாயி வெட்டிக் கொலை

புதுக்கோட்டை அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-12 17:53 GMT

விவசாயி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா பட்டத்தூரணி கிராமத்தை சேர்ந்தவர் விஜய் அனுகூலம். இவரது மகன் முத்துநாதன் (வயது 43). விவசாயியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆயிங்குடி வடக்கில் உள்ள தனது தென்னந்தோப்பிற்கு நேற்று இரவு சென்றார்.

இந்நிலையில், இன்று அதிகாலை ஆகியும் முத்துநாதன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை தேடி முத்துநாதனின் அண்ணன் ஆவுடையப்பன் ெதன்னந்தோப்பிற்கு சென்று பார்த்தார்.

வெட்டிக் கொலை

அப்போது தோப்பில் முத்துநாதன் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை பார்த்து ஆவுடையப்பன் கதறி அழுதார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் லாரா வரவழைக்கப்பட்டது. பின்னர் மோப்ப நாய் லாரா சம்பவ இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை சென்று முத்துநாதன் வீட்டில் போய் நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதற்கிடையே போலீசார் முத்துநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து முத்துநாதனை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்