டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர்களை வெட்டிய கொள்ளை கும்பல்

தேவர்குளம் அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்த கொள்ளை கும்பல், பணத்தை கொடுக்க மறுத்ததால் அங்கிருந்த 2 ஊழியர்களை அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-08-02 19:00 GMT

பனவடலிசத்திரம்:

தேவர்குளம் அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்த ெகாள்ளை கும்பல், பணத்தை கொடுக்க மறுத்ததால் அங்கிருந்த 2 ஊழியர்களை அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாஸ்மாக் கடை

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா தேவர்குளம் அருகே வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் ஊருக்கு கிழக்கு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.

இந்த கடையில் பனவடலிசத்திரம் பகுதியைச் சேர்ந்த பால்துரை (வயது 40), பாலமுருகன் (55) ஆகியோர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவில் டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை எண்ணி முடித்து அங்குள்ள கல்லா பெட்டியில் வைத்து சாவி மூலம் பூட்டினார்கள்.

கொள்ளை கும்பல்

அந்த சமயத்தில் ஒரு காரில் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வந்தது. அவர்களில் 3 பேர் கடைக்குள் சென்றனர். மற்றவர்கள் வெளியே மறைவான பகுதியில் நின்று கொண்டு இருந்தனர்.

டாஸ்மாக் கடைக்குள் சென்ற 3 பேரும், அங்கிருந்த பால்துரை, பாலமுருகன் ஆகியோரை அரிவாளை காட்டி பணம் இருக்கும் கல்லா பெட்டியின் சாவியை கேட்டு மிரட்டினார்கள். ஆனால் அவர்கள் சாவியை கொடுக்கவில்லை.

அரிவாள் வெட்டு

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், தாங்கள் வைத்து இருந்த அரிவாளால் பால்துரை, பாலமுருகன் ஆகியோரை வெட்டியது. இதில் வலிதாங்க முடியாமல் 2 பேரும் அலறினார்கள். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த கொள்ளை கும்பலைச் சேர்ந்த 6 பேரும் காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து உடனடியாக தேவர்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் மீரான் மைதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடையில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தன.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை கும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள்.

தேவர்குளம் அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர்களை ெகாள்ளை கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்