எடப்பாடி பழனிசாமி பரமக்குடி வருகை

முன்னாள் எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி பரமக்குடி வருகிறார். 110 அடி உயர கம்பத்தில் கட்சி கொடி ஏற்றுகிறார்.

Update: 2024-07-07 03:31 GMT

பரமக்குடி,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்பு அங்கிருந்து 9 மணிக்கு கார் மூலம் புறப்பட்டு பரமக்குடி வருகிறார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு பரமக்குடி அருகே உள்ள இலந்தைகுளம் பகுதியில் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஏற்பாட்டில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளனர்.

தொடர்ந்து அங்கிருந்து தெளிச்சாத்தநல்லூர் பகுதியில் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள 110 அடி உயர பிரமாண்ட கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கட்சி கொடியை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைக்கிறார்.

அங்கிருந்து பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் பரமக்குடி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் முத்தையா-சாந்தி ஆகியோரது இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். இதையடுத்து மீண்டும் மதுரை வழியாக சென்னை சென்றடைகிறார். எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

பரமக்குடி வரும் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட எல்லையான மரிச்சுக்கட்டியில் இருந்து பரமக்குடி நகர் வரை சாலையின் இருபுறமும் அ.தி.மு.க. கொடி தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டுள்ளது. பிளக்ஸ் போர்டுகள், வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்