மருமகள் நடத்தையில் சந்தேகம்: வாயில் மண்ணை திணித்து 1 வயது குழந்தை கொலை - மாமியார் வெறிச்செயல்

மருமகள் நடத்தையில் சந்தேகப்பட்டு 1 வயது குழந்தையின் வாயில் மண்ணை திணித்து கொன்ற மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-20 23:18 GMT

கோப்புப்படம் 

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் கோட்டைகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சந்தியா (21 வயது). இவர்களுடைய மகன் மோனிஷ் (2 வயது), மகள் கிருத்திகா (1 வயது). ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா தனது குழந்தைகளை வீட்டின் முன்பு விட்டுவிட்டு அருகே உள்ள பால் பண்ணைக்கு பால் ஊற்ற சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து சந்தியா தனது வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது கிருத்திகா சுயநினைவு இன்றி வாயில் மண்ணுடன் கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது மகளை மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பச்சிளம் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் கிருத்திகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சந்தியா அளித்த புகாரின்பேரில் தளவாய் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தனது குழந்தை சாவில் மாமியார் விருத்தம்பாள் (60 வயது) மீது சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, போலீசார் விருத்தம்பாளை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குழந்தையின் வாயில் மண்ணை திணித்து கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக விருத்தம்பாள் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- கிருத்திகா எனது மகனுக்கு பிறக்கவில்லை என்று சந்தியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தேன். சம்பவத்தன்று எனது பேரன் மோனிஷ் மீது கிருத்திகா மண்ணை அள்ளிப்போட்டு விளையாடிக்கொண்டு இருந்தாள். இதில் ஆத்திரம் அடைந்த நான் கிருத்திகா வாயில் மண்ணை திணித்தேன். இதில் மயங்கி விழுந்து கிருத்திகா இறந்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, தளவாய் போலீசார் விருத்தம்பாளை கைது செய்து செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்