மானிய விலையில் உளுந்து விதை வினியோகம்

மானிய விலையில் உளுந்து விதை வினியோகம் செய்யப்படுகிறது.

Update: 2023-01-06 19:36 GMT

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சம்பா பருவ நெல் அறுவடை முடிந்ததும், சுழற்சி முறையில் உளுந்து சாகுபடி செய்வதற்கு வசதியாக மானிய விலையில் உளுந்து விதை வழங்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 4 ஆயிரத்து 149 எக்டேர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, நடப்பு பருவத்திற்கான நெற்பயிர் அறுவடைக்குப் பின் பயறுவகைப் பயிர்கள் சாகுபடியை அனைத்து கிராமங்களிலும் ஊக்கப்படுத்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லுக்குப்பின் பயறுவகை பயிர்களை, பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்வதால் ஒரே பயிர் தொடர்ந்து சாகுபடி மேற்கொள்வது தவிர்க்கப்படும். மேலும், நெல் வயல்களில் மாற்றுப் பயிர் சாகுபடி செய்யப்படுவதால் நீர் பயன்பாடு குறைக்கப்பட்டு, நீர்வளம் சேமிக்கப்படுகிறது.

அதோடு சுழற்சி முறையில் சாகுபடி செய்யப்படும் உளுந்து பயிரை அறுவடை செய்த பின், அதன் தழைகளை வயல்களில் மடக்கி உழுவதால் மண் வளம் மேம்படுத்தப்படும். பயிர் சுழற்சி முறையினால், வயல்வெளிகளில் பூச்சிநோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. உளுந்து பயிர் குறுகிய காலப் பயிர் என்பதால் சம்பா பருவத்தில் நெல்லுக்கு இடப்படும் உரத்தில் மீதமிருக்கும் உரத்தினை பயன்படுத்துவதால் உரச்செலவு வெகுவாக குறையும். உளுந்து பயிரிடுவதால் உளுந்து பயிரில் நுண்ணுயிரிகளினால் உருவாகும் வேர் முடிச்சுகளால் காற்றில் உள்ள தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவு உளுந்து விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.400 மானியத்தில் விவசாயிகளுக்கு உளுந்து வினியோகம் செய்யப்பட உள்ளது. எனவே இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி தங்கள் பெயரை முன் பதிவு செய்து பயனடையலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்