மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

Update: 2023-05-30 19:04 GMT

கலந்தாய்வு

கரூர் அரசு கலைக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இக்கல்லூரியில் 1,260 இடங்களுக்கு 7 ஆயிரத்தும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதனையடுத்து கரூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

முதல் நாளான நேற்று சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு, மாணவ-மாணவிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் உள்ள 114 இடங்களுக்கு 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

விளையாட்டு வீரர்கள் பிரிவு

இந்த கலந்தாய்வில் விளையாட்டு வீரர்கள் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு என மாணவர்களுக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்விற்கு வந்திருந்த மாணவ-மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் பேராசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.

வருகிற 2-ந்தேதி இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், 5-ந்தேதி வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிக நிர்வாகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 6-ந்தேதி இளங்கலை வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும், 7-ந்தேதி இளம்அறிவியல் இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவிற்கும், 8-ந்தேதி இளம் அறிவியல் விலங்கியல், தாவரவியல், புவியியல், புவிஅமைப்பியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்