களக்காடு அருகே சமையல் தொழிலாளி வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை

களக்காடு அருகே சமையல் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்,காரணம் என்ன என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-22 09:01 GMT

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகன் (வயது 43). சமையல் தொழிலாளி ஆவார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு சுடலைமுத்துக்குமார் (12), அருண்குமார் (11) ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

இவருக்கு சிங்கிகுளம் கைலாசநாதர் கோயில் பின்புறம் உள்ள பத்துக்காட்டில் சொந்தமாக வயல் உள்ளது. அங்கு நெல் பயிர் செய்துள்ளார்.இன்று காலை அவர் வயலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தெப்பக்குளத்தின் அருகே பதுங்கியிருந்த மர்ம நபர்கள் முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் பலத்த காயம் அடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடி விட்டனர்.

அவ்வழியே வந்த விவசாயிகள் முருகன் வெட்டப்பட்டு கிடப்பதை பற்றி குடும்பத்தினருக்கும், களக்காடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

முருகனை கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் யார்? கொலைக்கு காரணம் என்ன? என்பது போன்ற விபரங்கள் தெரியவில்லை. இதுபற்றி களக்காடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்