இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கலந்தாய்வு

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் சேர இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு முகாம் 4 நாட்கள் வரை நடக்கிறது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-26 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் சேர இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு முகாம் 4 நாட்கள் வரை நடக்கிறது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட கலந்தாய்வு

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெத்தாலெட்சுமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டில் முதலாமாண்டு இளநிலை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு வருகிற 31-ந்தேதி அன்று காலை 9 மணிக்கு கல்லூரியில் உள்ள உமையாள் அரங்கில் நடைபெற உள்ளது. அன்று காலை விளையாட்டு, முன்னாள் ராணுவத்தினர், என்.சி.சி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.

அதைத் தொடர்ந்து வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் (பி.சி.ஏ) மற்றும் புவி அமைப்பியல் பாட பிரிவுகளுக்கும், மறுநாள் 2-ந் தேதி பி.காம்., பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

சான்றிதழ்கள்

வரும் 3-ந் தேதி அன்று பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு மற்றும் பொருளியல் பாடப்பிரிவுகளுக்கும் முதற்கட்ட பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்ட மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

இந்த கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருடன் தாங்கள் படித்த 10 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சிறப்பு பிரிவினராக இருந்தால் அதற்குரிய அனைத்துச்சான்றிதழ்களின் அசல் மற்றும் 2 நகல்கள், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும், கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தின் அனைத்து பக்கங்களையும் உள்ளடக்கிய நகல்கள் இரண்டையும் நேரில் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்