1½ கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது

சிவகங்கை அருகே 1½ கிலோ கஞ்சாவுடன் 2 வாலிபர்களை போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-08 18:45 GMT

போலீசார் ரோந்து

சிவகங்கை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடை செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தனிப்படை அமைத்துள்ளார். இந்நிலையில் சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் முத்துப்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முத்துப்பட்டி பஸ் நிலையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 3 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அதில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்டவர்களை போலீசார் சோதனையிட்டனர். அதில் அவர்களிடம் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

1½ கிலோ கஞ்சா

போலீசாரின் விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த விக்னேஷ்(வயது 28), முத்துப்பட்டி புதுரை சேர்ந்த ரமேஷ் (28), மாத்தூரை சேர்ந்த ஊர்காவலன் (30) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதில் ஊர்காவலன் மட்டும் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்ேனஷ், ரமேசை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஊர்காவலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்