மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டை - கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டைகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

Update: 2023-03-28 08:18 GMT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சினைகள் தொடர்பாகவும், உதவிகள் வழங்கிட வேண்டியும், மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

இதில் நிலம் சம்பந்தமாக 98 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 76 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 63 மனுக்களும், இதர துறைகள் சம்பந்தமாக 68 மனுக்களும் என மொத்தம் 361 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிட துறை சாா்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இலவச பஸ் பயண சலுகை அட்டைகளை வழங்கினார். இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட வழங்கல் அலுவலர் சேகர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்