கவர்னர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கவர்னர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2023-07-09 07:56 GMT

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசுடன் மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழகத்தில் கவர்னரை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இவ்வாறு நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில் டெல்லி சென்றுள்ள கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் தற்போது நிலவக்கூடிய அரசியல் சூழல், தமிழக அரசுடன் ஏற்பட்டு வரும் மோதல் போக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி விவாதித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கவர்னர் மீதான 15 பக்க புகார் கடிதத்தை ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகார் அளித்துள்ளார். மேலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட மசோதாக்கள் நிலுவை, முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஒப்புதல் அளிக்காதது உள்ளிட்ட ஆளுநரின் செயல்பாடுகளும் கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய மந்திரி அமித்ஷாவை கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்த நிலையில் ஜனாதிபதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்