தமிழ்நாட்டில் பாஜக ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வளர முடியாது - கி.வீரமணி

தமிழ்நாட்டில் பாஜக ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வளர முடியாது என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-21 10:41 GMT

குத்தாலம்,

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நகர பூங்காவில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பகுத்தறிவு என்பதே விஞ்ஞானம்தான். இப்போது, சில அரைவேக்காடுகள் திராவிட மாடல் ஆட்சியை கவிழ்த்து விடுவதாக கூறுகின்றனர். அரசியல் சட்டம் ஜாதி ஒழிப்புக்கு எதிராக உள்ளதாக தந்தை பெரியார் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதனை மாற்றுவதற்கு கால அவகாசமும் அளித்தார். ஆனால், அதன் பின்னரும் அதனை மாற்றாத காரணத்தால் அரசியல் சட்டநகல் எதிர்ப்பு போராட்டம் நடத்தினார். திராவிட கழகத்தில் 100 வயது கடந்த பகுத்தறிவாளர்கள் பலர் உள்ளனர்.

இவர்களில் யாரும் திருக்கடையூர் கோவிலுக்கு சென்று பூஜை செய்து வந்ததில்லை. கடவுள் நம்பிக்கையை நான் கொச்சைப்படுத்தவில்லை.

ஆனால், சிந்தித்து செயல்பட வேண்டும். பகுத்தறிவாளர்கள் தான் அதிக வயது வாழ்கின்றனர். அறிவியல்தான் வயதை வளர்த்துள்ளது.

பெரியம்மை, பிளேக், காலரா நோய்களை கடவுளுடன் தொடர்புபடுத்தி பேசினர். தற்போது கொரோனா தொற்று உள்ளது. அப்போது கடவுளும்கூட கோவிலை விட்டு வெளியே வரவில்லை. அப்போது கடவுள் மனிதர்களை காப்பாற்றவில்லை. தடுப்பூசிதான் நம்மை காப்பாற்றியது.

அறிவியல்தான் நம்மை காப்பாற்றும். திராவிடர் கழகம் மட்டும் இல்லை என்றால் நாட்டில் குலக்கல்வி திட்டம் தான் இருந்திருக்கும். நம்மில் பலரது மகன்கள் பட்டதாரிகளாகவும், மருத்துவர்களாகவும், அறிஞர்களாகவும் இருந்திருக்க முடியாது.

சமஸ்கிருதம் படித்தவர்கள்தான் டாக்டர்களாக, வக்கீல் களாக இருந்திருப்பார்கள். இப்போது நீட் தேர்வை நடத்துகின்றனர். ஆனால், ஒரு ஆண்டாவது நீட் தேர்வு ஊழல் இல்லாமல் நடந்திருக்கிறதா? அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வழி செய்வதுதான் திராவிட மாடல்.

இதில் பார்ப்பனர்களுக்கு கூட உரிய இட ஒதுக்கீடு கிடைக்கும். மூன்று சதவீத இட ஒதுக்கீட்டை பெற வேண்டிய பார்ப்பனர்கள் 97 சதவீதத்தையும் அபகரிப்பதையே திராவிட மாடல் எதிர்க்கிறது.

அதிமுக தனது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டது. தன்மானத்தோடு செயல்படுவது திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் திராவிட இயக்கங்கள்தான்.

தமிழ்நாட்டில் பாஜக ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் வளர முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்