அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது

பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை அவை நடந்த உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டம். இது ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க, மத்திய, மாநில அரசுப்பணிகளில் சேர, திருமணத்தை பதிவு செய்ய, டிரைவிங் லைசென்சு மற்றும் பாஸ்போர்ட் வாங்க மற்றும் இதுபோன்ற அனைத்து பணிகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயம் ஆக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.

Update: 2022-11-29 19:06 GMT

சட்டத்திருத்தம்

அதற்காக, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச்சட்டம் 1969-ல் திருத்தம் செய்ய உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தொடரில், அதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்படுவதை வைத்து, ஒருங்கிணைந்த தரவுகள் சேமிக்கும் தளம் உருவாக்கப்படும். அதில், மனித தலையீடுகள் இல்லாமல் 18 வயது பூர்த்தியான உடன் வாக்காளர் அடையாள அட்டையில் தானாகவே பெயர் சேர்க்கப்பட்டு விடும்.

அதேபோல் இறந்தவர்களின் பெயர்கள், இறப்புச் சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்ட உடன் தானாக நீக்கப்பட்டுவிடும். அதற்காக ஆஸ்பத்திரிகளில் இறப்பு சான்றிதழ்களை கட்டாயம் ஆக்குவதையும், உள்ளூர் பதிவாளரிடம் சமர்ப்பிக்கும் போது இறப்புக்கான காரணத்தைக் குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட உள்ளது. மேலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைன் முறையில் வழங்கப்படும். அதே நேரத்தில் இந்த தகவல்களை தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலும் பதிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

மக்களுக்கு சிரமம்

பிறப்பு, இறப்புகளை பதிவிடும் முறை தற்போது நடைமுறையில் இருந்தாலும், சான்றிதழ்களை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்ற மத்திய அரசின் முன்மொழிவு சாத்தியமா? என்பது குறித்து கரூர் மாவட்ட பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

கரூர் காந்திகிராமத்தை சேர்ந்த ராஜாராம்:- ஏற்கனவே ஆதார் கார்டில் பிறந்த தேதி உள்ளது. இதுபோன்று லைெசன்சில் பிறந்த தேதி இருக்கிறது. பள்ளி மதிப்பெண் சான்றிதழில் பிறந்ததேதி வருகிறது. அப்படி இருக்கும் போது மீண்டும் பிறப்பு சான்று கேட்பது தேவையில்லாத ஒன்று. இது ஒரு சுமையாக இருக்கும். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு பிறப்பு சான்று கேட்பது அவசியமானது. ஆனால் மற்றவர்களுக்கு பிறப்பு சான்று கேட்பது மிகப்பெரிய சுமையாகத்தான் இருக்கும். இதனால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. தற்போது அனைத்திற்கும் ஆதார் கார்டு போதும் என்கிற நிலை உள்ளது. தற்போது மீண்டும் பிறப்பு சான்றிதழ் கேட்பதால், மக்கள் சிரமம் அடைவார்கள்.

பிறப்பு சான்றிதழ் கிடையாது

திருக்காடுதுறை அருகே கரைப்பாளையம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம்:- மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு சலுகைகளை பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வயதானவர்கள் தங்கள் பிறந்த தேதியையும், ஆண்டையும் கூட நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். எழுதி வைத்துக்கொள்ளவும் மாட்டார்கள். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு மட்டுமே பிறப்புச் சான்றிதழ் பெறப்பட்டு வைத்திருப்பார்கள். எங்களைப் போன்றவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் கிடையாது. ஆனால் நாங்கள் மத்திய, மாநில அரசுகளின் சலுகை பெற வேண்டுமென்றால் பிறப்பு சான்றிதழுக்கு எங்கே செல்வது. எனவே மத்திய, மாநில அரசுகள் இது குறித்து ஆலோசனை செய்து யாரும் பாதிக்கப்படாமல் இருக்குமாறு சட்டத்தை உருவாக்க வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சி

சின்ன தாராபுரத்தை சேர்ந்த அபிராமி பாலு:- தற்போது ஆதார் கார்டு மற்றும் பள்ளி மாற்றுச்சான்றிதழில் பிறந்த தேதி உள்ளது. அதுவே போதுமானது. ஆதார் கார்டு, பள்ளி மாற்றுச்சான்றிதழ் தொலைந்து விட்டால் எளிதில் வாங்கி விடலாம். ஆனால் 2000-ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் பிறப்பு சான்றிதழை தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று கால்கடுக்க காத்திருந்து வாங்க வேண்டியதாக இருந்தது. இதில் நேர விரயமும், அலைச்சலும் ஏற்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்துமே ஆன்லைன் என்ற வரிசையில் பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெறுவதும் இணைந்துவிட்டது. இது வசதியாக இருக்கிறது.

வரவேற்கத்தக்கது

குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை தமிழ் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவன் வாட்போக்கி:- பிறப்பு, இறப்பு குறித்த தகவலை அரசுக்கு தெரிவிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். பிறப்பு, இறப்புகளை பதிவிடும் முறை தற்போது நடைமுறையில் இருந்தாலும், சான்றிதழ்களை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்ற மத்திய அரசின் முன்மொழிவு வரவேற்கத்தக்கது.

முதியவர்கள் பாதிப்பு

தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமி:- குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் அந்தந்த பகுதியை சேர்ந்த உள்ளாட்சி அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. நாங்கள் பிறந்த காலகட்டத்தில் பிறந்த தேதி எழுதி வைக்கவில்லை. ஜாதகம் எழுதவில்லை. நாங்கள் குறிப்பிட்ட ஆண்டுகளை மனதில் வைத்துக் கொண்டு வயதை நிர்ணயித்துக் கொள்கிறோம். அப்படி இருக்கும் போது பிறப்புச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டால் எங்களை போன்ற வயதானவர்கள் எந்த சலுகையும் பெற முடியாமலும், எந்த சான்றிதழ்களும் பெற முடியாத சூழ்நிலை ஏற்படும். எனவே மத்திய அரசு வயதானவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் தேவையில்லை என்றும், தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்று தேவை என சட்டம் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் மட்டுமே எங்களைப் போன்ற முதியவர்கள் பாதிப்படையாமல் இருப்பார்கள்.

போலிகளை தவிர்க்கலாம்

கரூரை சேர்ந்த கோகுல்:- வாக்காளர் அடையாள அட்டை, வேலைவாய்ப்பு, பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்கு, பாஸ்போர்ட் வாங்குவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது தான். ஏனெனில், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் முறையாக பதிவு செய்யப்படுவதன் மூலமாக போலிகளை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்தியாவில் பிறப்பும் இறப்பும்

சமீபத்திய தகவலின்படி, இந்தியாவில் ஒரு வருடத்துக்கு சராசரியாக 2 கோடியே 69 லட்சத்து 32 ஆயிரத்து 586 பிறப்பு நிகழ்கிறது. பிறப்பு விகிதம் 17.163 சதவீதம் (ஆயிரம் பேருக்கு) ஆக இருக்கிறது. ஒரு நாளுக்கு சராசரியாக 73 ஆயிரத்து 787 பேரும், ஒரு மணி நேரத்துக்கு 3 ஆயிரத்து 74 பேரும், ஒரு நிமிடத்துக்கு 51 பேரும் பூமியில் புதிதாக அவதரிக்கிறார்கள்.

அதேபோல, இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 97 லட்சத்து 78 ஆயிரத்து 73 இறப்புகள் நிகழ்கிறது. இறப்பு விகிதம் 7.3 சதவீதம் (ஆயிரம் பேருக்கு) ஆக உள்ளது. ஒரு நாளுக்கு சராசரியாக 26 ஆயிரத்து 789 பேரும், ஒரு மணி நேரத்துக்கு 1,116 பேரும், ஒரு நிமிடத்துக்கு 19 பேரும் இந்த பூலோக வாழ்வை நீத்து, உயிர் துறக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய மக்கள் தொகையைவிட

இந்தியாவில் ஓர் ஆண்டில் பிறப்பவர் எண்ணிக்கை அதிகம்

உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை 800 கோடியை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. அதில், இந்தியாவினுடைய பங்களிப்பு மட்டும் 141 கோடியே 20 லட்சத்தையும் தாண்டி நிற்காமல் செல்கிறது. உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தப்படியாக, இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நிலவரப்படி, ஆஸ்திரேலிய நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 57 லட்சம் ஆகும். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சராசரியாக 2 கோடியே 69 லட்சம் பேர் புதிதாக பிறக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையை விடவும், இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு பிறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

சட்டம் என்ன சொல்கிறது?

மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து, நாட்டில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பிறப்பு மற்றும் இறப்பு விவரங்கள் முக்கியமானதாகும். இதற்காக, மத்திய அரசு கடந்த 1969-ம் ஆண்டு பிறப்பு, இறப்பு பதிவு சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி 2000-ம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் உருவாக்கப்பட்டன. அதில், கடந்த 2017-ம் ஆண்டு சில திருத்தங்களும் செய்யப்பட்டன. அதன்படி, பிறப்பு மற்றும் இறப்பு நடந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் கிடையாது.

22-வது நாள் முதல் 30 நாட்களுக்குள் பதிவு செய்வதற்கு தாமத கட்டணம் ரூ.100-ம், 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் பதிவு செய்வதற்கு ரூ.200-ம், ஓராண்டுக்கு மேல் பதிவதற்கு ரூ.500-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.200 ஆகவும், கூடுதல் நகலுக்கு தலா ரூ.200-ம் கட்டணமாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்