அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது-பொதுமக்கள் கருத்து

அனைத்துப் பணிகளுக்கும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆகிறது என்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Update: 2022-11-29 23:00 GMT

பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை அவை நடந்த உடன் பதிவு செய்ய வேண்டும் என்பது அரசின் சட்டம். இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க, மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர, திருமணத்தை பதிவு செய்ய, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற அனைத்து பணிகளுக்கும் பிறப்பு சான்றிதழை கட்டாயம் ஆக்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.

சட்டத்திருத்தம்

அதற்காக, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1969-ல் திருத்தம் செய்ய உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தொடரில், அதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்படுவதை வைத்து, ஒருங்கிணைந்த தரவுகள் சேமிக்கும் தளம் உருவாக்கப்படும்.

அதில், மனித தலையீடுகள் இல்லாமல் 18 வயது பூர்த்தியான உடன் வாக்காளர் அடையாள அட்டையில் தானாகவே பெயர் சேர்க்கப்பட்டு விடும். அதேபோல் இறந்தவர்களின் பெயர்கள், இறப்புச் சான்றிதழ்கள் பதிவு செய்யப்பட்ட உடன் தானாக நீக்கப்பட்டுவிடும். அதற்காக ஆஸ்பத்திரிகளில் இறப்பு சான்றிதழ்களை கட்டாயம் ஆக்குவதையும், உள்ளூர் பதிவாளரிடம் சமர்ப்பிக்கும் போது இறப்புக்கான காரணத்தை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட உள்ளது.

மேலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் ஆன்லைன் முறையில் வழங்கப்படும். அதே நேரத்தில் இந்த தகவல்களை தேசிய மக்கள் தொகை பதிவேட்டிலும் பதிவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.

பொதுமக்கள் கருத்து

பிறப்பு, இறப்புகளை பதிவிடும் முறை தற்போது நடைமுறையில் இருந்தாலும், சான்றிதழ்களை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்ற மத்திய அரசின் முன்மொழிவு சாத்தியமா? என்பது குறித்து வக்கீல், குடும்பத் தலைவி, கல்லூரி மாணவி மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், செவிலியர் ஆகியோர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

வரவேற்கத்தக்கது

சேலம் மேட்டுப்பட்டியை சேர்ந்த குடும்ப தலைவி தமிழரசி:-

பிறப்பு சான்றிதழ் என்பது மிக முக்கியம். ஏன் என்றால் ஒருவரின் அடையாளம் என்பதுடன், அதை வைத்துதான் எதிர்காலம் கணிக்கப்படுகிறது. ஒவ்வொருவரின் பிறப்பும், இந்திய அரசால் பதிவு செய்யப்படுவது என்பது ஒரு நல்ல செயல்தான். அதனால் அரசு வேலை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்பது வரவேற்கத்தக்கது. மேலும் பிறப்பு சான்றிதழ் பெறுவது தற்போது எளிதாக்கப்பட்டு உள்ளது.

கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த விக்ரம்:-

அரசு வேலை உள்ளிட்டவைகளுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்பது இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு சாதகமான திட்டம். ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு பிறந்த சிலர் பிறப்பு சான்றிதழ் பெற்று இருக்க மாட்டார்கள். அவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கோ, அரசு வேலைக்கு செல்வதற்கோ மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும். அவர்களுக்கு அரசு பிறப்பு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரியாக கிடைக்கும்

காமலாபுரம் பகுதியை சேர்ந்த சின்னண்ணன்:-

பிறப்பு சான்று கட்டாயம் என்ற திட்டம் அமல்படுத்தினால், ஒருவருக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் அனைத்தும் சரியாக கிடைக்கும். குறிப்பாக பிறப்பு சான்றிதழ் வழியாக கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வெளிநாட்டில் கல்வி, வேலை வாய்ப்பு, அரசு பணிக்கு தேவையான உண்மையான வயது உள்ளிட்டவைகளை சரிபார்த்துக்கொள்ளலாம். மேலும் அரசு வழங்கும் சலுகைகள், சாதாரண மக்களுக்கும் கிடைக்கும். அனைத்து சான்றுகளிலும் சரியான தகவல் பதிவாகும். அரசு சான்றுகள் பெறுவதில் எளிதாக இருக்கும். அதே போன்று ஆதார், பான்கார்டு, வாக்காளர் அட்டை, வங்கி பயன்பாடு, விசா போன்றவற்றுக்கு பயன் உள்ளதாக இருக்கும். எனவே பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.

சுகாதார செவிலியர்

கிராம சுகாதார செவிலியர் சித்ரா:-

1990-ம் ஆண்டுக்கு முன்பு பிறந்த சிலர் பிறப்பு சான்றிதழ் வாங்காமலேயே உள்ளனர். பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற புதிய சட்டம் இயற்றப்பட்டால் இவர்கள் என்ன செய்வார்கள். மேலும் பிறப்பு சான்றிதழ் அவர்கள் எவ்வாறு வாங்க முடியும். 1990-க்கு முன்பு பிறந்த சிலர் தற்போது சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்து அபராதம் கட்டி கோர்ட்டு மூலம் பிறப்பு சான்றிதழ் பெற்று வருகிறார்கள்.

கிராமப்புறத்தில் வீட்டிலேயே சுகப்பிரசவம் நடைபெற்றால், அந்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்று தாய், குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்போம். பின்னர் 24 மணி நேரத்தில் அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க சுகாதார ஆய்வாளர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கல்லூரி மாணவி

கல்லூரி மாணவி மேனகபிரியா:-

ஒரு சட்டம் இயற்றும் போது மக்களுக்கு சிரமம் ஏற்பட கூடாது. இந்த நவீன காலத்தில் ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்தும் வெளிப்படை தன்மையாகி விட்டது. இதனால் தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் அதிகம் நடக்கிறது. இந்த நிலையில் பிறப்பு சான்றிதழும் கட்டாயம் என்பதற்கு என்ன காரணம்? இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் பொதுமக்களிடம் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளது. தற்போது 40 வயதுக்கு மேற்பட்ட பலர் பிறப்பு சான்றிதழ் வாங்காமல் இருந்து உள்ளனர். பின்னர் அவர் பிறந்த போது எழுதிய ஜாதகத்தை வைத்து ஒரு குறிப்பிட்ட தேதியில் பிறந்தார் என்று பிறப்பு சான்றிதழ் பெற்ற சம்பவங்கள் நடந்து உள்ளன. எனவே இந்த சட்டம் இயற்றினால் 100 சதவீதம் சாத்தியமா? என்று யோசித்து இயற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்தியாவில் பிறப்பும் இறப்பும்

சமீபத்திய தகவலின்படி, இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக 2 கோடியே 69 லட்சத்து 32 ஆயிரத்து 586 பிறப்பு நிகழ்கிறது. பிறப்பு விகிதம் 17.163 சதவீதம் (ஆயிரம் பேருக்கு) ஆக இருக்கிறது. ஒரு நாளுக்கு சராசரியாக 73 ஆயிரத்து 787 பேரும், ஒரு மணி நேரத்துக்கு 3 ஆயிரத்து 74 பேரும், ஒரு நிமிடத்துக்கு 51 பேரும் பூமியில் புதிதாக அவதரிக்கிறார்கள். அதேபோல, இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 97 லட்சத்து 78 ஆயிரத்து 73 இறப்புகள் நிகழ்கிறது. இறப்பு விகிதம் 7.3 சதவீதம் (ஆயிரம் பேருக்கு) ஆக உள்ளது. ஒரு நாளுக்கு சராசரியாக 26 ஆயிரத்து 789 பேரும், ஒரு மணி நேரத்துக்கு 1,116 பேரும், ஒரு நிமிடத்துக்கு 19 பேரும் இந்த பூலோக வாழ்வை நீத்து, உயிர் துறக்கிறார்கள்.

இந்தியாவில் பிறப்பவர் எண்ணிக்கை அதிகம்

உலக மக்கள் தொகையின் எண்ணிக்கை 800 கோடியை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. அதில், இந்தியாவினுடைய பங்களிப்பு மட்டும் 141 கோடியே 20 லட்சத்தையும் தாண்டி நிற்காமல் செல்கிறது. உலக அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தப்படியாக, இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நிலவரப்படி, ஆஸ்திரேலிய நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 57 லட்சம் ஆகும். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சராசரியாக 2 கோடியே 69 லட்சம் பேர் புதிதாக பிறக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையை விடவும், இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு பிறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

சட்டம் என்ன சொல்கிறது?

மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து, நாட்டில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பிறப்பு மற்றும் இறப்பு விவரங்கள் முக்கியமானதாகும். இதற்காக, மத்திய அரசு கடந்த 1969-ம் ஆண்டு பிறப்பு, இறப்பு பதிவு சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி 2000-ம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் உருவாக்கப்பட்டன. அதில், கடந்த 2017-ம் ஆண்டு சில திருத்தங்களும் செய்யப்பட்டன. அதன்படி, பிறப்பு மற்றும் இறப்பு நடந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் கட்டணம் கிடையாது.

22-வது நாள் முதல் 30 நாட்களுக்குள் பதிவு செய்வதற்கு தாமத கட்டணம் ரூ.100-ம், 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் பதிவு செய்வதற்கு ரூ.200-ம், ஓராண்டுக்கு மேல் பதிவதற்கு ரூ.500-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.200 ஆகவும், கூடுதல் நகலுக்கு தலா ரூ.200-ம் கட்டணமாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்