பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடியே 17 லட்சம் மோசடி செய்தவர் கைது

அவடி அருகே ஷேர் மார்க்கெட்டில் போட்டு பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடி 17 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-29 11:48 GMT

ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி (வயது 60). இவருக்கு, அதே பகுதி ராம்நகரை சேர்ந்த ஹாஜா மொய்தீன் (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஹாஜா மொய்தீன், தன்னிடம் பணத்தை கொடுத்தால் அதை ஷேர் மார்க்கெட்டில் போட்டு அதன் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவேன் என்று தங்கமணியிடம் ஆசை வார்த்தை கூறினார்.

அதை நம்பிய தங்கமணி, தன்னிடம் இருந்த ரூ.54 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்தார். ஹாஜா மொய்தீன், இதேபோல் அந்த பகுதியில் உள்ள மேலும் பலரிடம் இருந்து பல லட்சம் பணத்தை பெற்றுள்ளார்.

ஆனால் அவர் சொன்னது போல் யாருக்கும் பணத்தை இரட்டிப்பாக்கி தரவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள், தாங்கள் கொடுத்த பணத்தையாக தரும்படி கேட்டனர். ஆனால் ஹாஜா மொய்தீன் பணத்தை தராமல் ஏமாற்றி வந்தார்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான தங்கமணி, ஆவடியில் உள்ள போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஹாஜா மொய்தீன், தங்கமணி உள்பட 20-க்கும் மேற்பட்டோரிடம் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை போட்டு இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 17 லட்சத்து 25 ஆயிரம் வரை ஏமாற்றி மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று போலீசார் ஹாஜா மொய்தீனை கைது செய்து அம்பத்தூர் கோட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்